புதுச்சேரி: புதுச்சேரிக்கு வருடந்தோறும் கோடைகாலங்களில் சாத்துக்குடி பழ வரத்து அதிகளவில் இருக்கும். குளிர்பானக் கடைகளில் சாத்துக்குடி ஜூஸ் வியாபாரமும் ஜரூராக நடக்கும். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிகளவில் சாத்துக்குடி ஜூஸ் அருந்துவார்கள். ஆனால் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியே உணவு பொருட்களை உண்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் சாப்பிட ஆர்வம் காட்டவில்லை. இதனால் கோடை காலத்தில் அதிகளவில் வியாபாரத்தை எதிர்பார்த்த குளிர்பான கடைகள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளன. இருப்பினும் புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து வழக்கம்போல் சாத்துக்குடி பழ மூட்டைகள் அதிகளவில் இறக்குமதியாகின்றன.