திண்டிவனம்: திண்டிவனத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ள பெண்கள் உணவு கேட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்னை கோயம்பேடு காய்கறி மற்றும் பூ மார்க்கெட்டில் பணிசெய்து வந்தனர். இதில் திண்டிவனம், மயிலம், ஒலக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 163 பேர் திண்டிவனம் பொறியியல் கல்லூரியில் உள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது. 100 பேருக்கு தயாரிக்கும் உணவை 120 பேர் சாப்பிடலாம் எனக்கூறி உணவு தயாரிக்கப்பட்டது. ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 163 பேர் இருந்ததால் சாப்பாடு பற்றாக்குறை ஏற்பட்டது.