நேற்று 2 மாநகராட்சி விடுவிப்பு; சென்னை உட்பட 3 மாநகராட்சிகளுக்கான முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவு; மீண்டும் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊடரங்கு  அமலில் இருந்தாலும் பொதுமக்களில் சிலர் பைக், ஸ்கூட்டர் மற்றும்  கார்களில் வெளியே சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் மற்றும் நூதன தண்டனை விதித்தாலும்,  நாளுக்கு நாள்  பொதுமக்கள் வெளியே வருவது அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை.

குறிப்பாக காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள வாகனங்களில் மனைவி, குழந்தைகளுடன் குடும்பத்துடனும்,  நண்பர்களுடனும் செல்வது கூட்ட நெரிசலை அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை,  கோவை, மதுரை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. சென்னையில் மட்டும் தினசரி 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற நகர் பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 26ம் தேதி காலை 6 மணியில் இருந்து (இன்று) 29ம் தேதி இரவு 9 மணி வரை தொடர்ந்து 4 நாட்களும், சேலம்,  திருப்பூர் மாநகராட்சிகளில் கடந்த 26-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதில் சேலத்தில் கடந்த 25-ம் தேதியை ஊரடங்கு தொடங்கியது. அரசு அறிவித்தப்படி இன்று 4-வது நாளாக  முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த 4 நாட்களும் மருந்து கடைகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், பத்திரிகைகள், தொலைக்காட்சி பணியாளர்களை தவிர வேறு யாரும் வெளியே வர அனுமதியில்லை. மளிகை கடை, காய்கறி கடை, பேக்கரி உள்ளிட்ட எந்த கடைகளும்  திறக்கவும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளுக்கான முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நேற்று இரவுடன் முடிந்தது  குறிப்பிடத்தக்கது. கடலூர், திருவாரூர், தென்காசி, விழுப்புரம், நாகை, தஞ்சை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.

Related Stories: