பாதிப்பில்லா இடங்களில் தொழில் தொடங்க அனுமதிங்க; ஊரடங்கை மேலும் நீட்டிக்க பிரதமர் மோடியிடம் 10 மாநில முதல்வர்கள் வலியுறுத்தியதாக தகவல்

டெல்லி: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பரவும் சூழலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் மே 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மேலும் சில மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும்  ஒடிசா மாநிலங்கள் மே 3க்கு பின்னரும் ஊரடங்கினை தொடருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றும் என அறிவித்துள்ளன. தெலங்கானா மாநிலத்தில் மட்டும் ஊரடங்கை நீட்டித்து அரசு  ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

பிரதமருடனான ஆலோசனைக்கு பின் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்ய அசாம், கேரளா மற்றும் பீகார் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன்பிரதேச முதல்வர்களுடன் வீடியோ  கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 10 மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம், மேகாலாயா உள்ளிட்ட 10 மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊரடங்கை ஒரு மாதம் நீடிக்க வேண்டுமென ஒடிசா முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். சிவப்பு மண்டல பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கும் என பிரதமர் கூறியதாக தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிக்கப்படாத இடங்களில் தொழில்களை தொடங்க அனுமதிக்க கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் சில தளர்வுகள் இருக்கும் எனவும் பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: