மேட்டுப்பாளையம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு அரசு டாக்டர் பலி: தாய் தற்கொலை முயற்சி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு அரசு டாக்டர் பலியானார். அவரது தாய் தற்கொலைக்கு முயன்றார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரயான்நகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் ஜெயமோகன் (29), நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடா ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது. இதைத்தொடர்ந்து நர்ஸ்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயமோகனை அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்றதும் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயமோகனை பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு டாக்டர் பரிசோதித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவருக்கு கொரோனா, டைபாய்ட், டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளதா? என்று அறிய ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் ஜெயமோகனுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது.  தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயமோகன் நேற்று இரவு உயிரிழந்தார். இதை அறிந்து அவரது தாய் ஜோதி அதிர்ச்சியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்

Related Stories: