லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த மாதம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு, சமீபத்தில் உடல்நிலை மோசமானது. இதனால், மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஜான்சனில் உடல்நிலையில் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நல்ல உடல்நிலையில் உள்ள போரிஸ் ஜான்சன் நேற்றுமுன்தினம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல் நிலை தேறியதால், நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.