மும்பை: மும்பையில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை ஈடுபட்டு கைது செய்யப்படுவார்கள் என்று மராட்டிய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
மேலும், நாட்டின் நிதி தலைநகரும், மராட்டிய தலைநகருமான மும்பையில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் கொரோனா தொற்று நுழைந்து இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,018 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மராட்டியத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்மூலம், மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக தொற்று உறுதியான 66 பேரில் 44 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதனால் மராட்டியத்தில் முக்கிய நகரமான மும்பையில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். முகக்கவசம் அணியாமல் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.