புதுடெல்லி: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் நிலைய ஓய்வறைகளில் பயணிகள் தங்கும் கால அளவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடெங்கும் நேற்று முன்தினம் முதல் வரும் 31ம் தேதி வரை பயணிகள் ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளில் ரயில் பயணிகள் 3 மணி நேரம் முதல் 2 நாட்கள் வரை தங்குவதற்கு ரயில்வே அனுமதி வழங்கியிருந்தது. தற்போது ரயில்கள் ரத்து காரணமாக பயணிகள் வேறு இடங்களில் தங்க முடியாத சூழ்நிலை நிலவுவதால் ஓய்வறைகளில் தங்கியுள்ள பயணிகள் தங்கும் கால அளவை நீட்டித்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.