புதுடெல்லி, : சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்கவும் ஒரே விதமான காகிதப் பயன்பாட்டினை செயல்படுத்தவும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் ஏ4 அளவு காகிதங்களில் மட்டுமே மனுக்களைப் பெற உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏ3, லீகல், ஏ4 என பல்வேறு அளவிலான காகிதங்களில் ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்டதாக இருந்து வந்தது. மனுக்கள் அதிகளவு இடம் விட்டு எழுதப்படுவதாலும், அச்சிடப்படுவதாலும் பெருமளவு காகிதம், பணம் விரயம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதற்கிடையே, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உச்சநீதிமன்ற பதிவாளருக்கு கடந்த ஜனவரி 14ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், உள்மட்ட அளவிலான தகவல் தொடர்புகளுக்கு ஏ4 காகிதத்தின் இரண்டு பக்கங்களையும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தி இருந்தார்.