அசுன்சியன்: பிரேசில் கால் பந்தாட்ட வீரர் ரொனால்டினோ போலி பாஸ்போர்ட்டில் பராகுவே வந்ததாக, அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து வீரரும், ஸ்பெயின் நாட்டின் எப்.சி. பார்சிலோனா அணியின் முன்னணி வீரருமான ரொனால்டினோ, அவரது மூத்த சகோதரர் ராபர்டோ டி அசிசுடன், தென் அமெரிக்க நாடான பராகுவேயில் நடைபெறும் அறக்கட்டளை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றார். அவர்கள் இருவரும் அங்குள்ள யாட்ச் கோல்ப் கிளப் என்ற நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தனர். இந்நிலையில், அங்கு சென்ற பராகுவே காவல்துறையினர் ரொனால்டினோ போலி பாஸ்போர்ட்டில் வந்திருப்பதாக கூறி சகோதரர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரும் இன்று காலை 8 மணிக்கு பராகுவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்கு பின்னரும் அவர்கள் இருவரும் நட்சத்திர விடுதியில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.