மதுரை: மதுரை சித்திரை திருவிழா நெருங்கும் நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டத்திற்கு மாசி வீதிகள் தயாராகவில்லை. ஸ்மார்ட் சிட்டி பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் மாசி வீதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் தற்போது வரை மூடப்படாமல் உள்ளன. புகழ் பெற்ற மதுரை சித்திரை பெருந்திருவிழா ஏப்.25ல் மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. அன்று முதல் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், சுவாமி வீதி உலா நடைபெறும். மே 4ல் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். அன்று இரவு பூப்பல்லக்கு, உச்சகட்டமாக மே 5ல் மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. 4 மாசி வீதிகளிலும் ஒரே நேரத்தில் 2 பெரிய தேர்கள் வலம் வரும் என்பதால், அந்த வீதிகள் முன்கூட்டியே சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது திருவிழா நெருங்கி வரும் நிலையில் அந்த வீதிகளில் ஸ்மாரட் சிட்டி பணிகளுக்காக தோண்டி உருக்குலைந்து கிடக்கின்றன. மூன்றரை அடி ஆழம், 4 அடி அகலத்திற்கு வீதியின் நடுவில் தோண்டிய பள்ளம் இன்னும் மூடப்படாமல் அப்படியே கிடக்கிறது. அங்குள்ள கடைகளுக்கு பள்ளங்களை தாண்டி. பலகையில் ஏறித் தான் நுழைய முடியும். முக்கியமாக, மாசி வீதிகளில் தோண்டிய பள்ளங்களை மூட முடியாமல் திணறும் நிலை நீடிக்கிறது. முன்கூட்டியே திட்டமிடாமல் தேரை இழுத்து நடுரோட்டில் விட்ட கதையாக நிற்கிறது.