சேலம் அருகே பயங்கரம் 500 ரூபாய்க்காக மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்

சேலம்: சேலம் அருகே பட்டப்பகலில் மூதாட்டியை கத்தியால் குத்திகொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த ₹500 ரூபாயை பறித்துசென்ற சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் அருகே திருமலைகிரி கொல்லத்தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மனைவி பழனியம்மாள்(75). இவர்களுக்கு பெரியசாமி(62), முத்து(59) என்ற மகன்களும், ராஜாத்தி(56), இந்திராணி(49) என்ற மகள்களும் உள்ளனர். மூதாட்டி  பழனியம்மாள், வீட்டின் அருகில் உள்ள ரேசன்கடை அருகில் அமர்ந்து அங்கு வருவோரிடம் பேசிக்கொண்டிருப்பார். அதே போல நேற்று மாலை 3 மணி அளவில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது சுமார் 17 வயது மதிக்கதக்க சிறுவன்,  மொபட்டில் அங்கு வந்தான். அந்த சிறுவன், நன்கு பழக்கமானவன் போல மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தான். திடீரென தான் வைத்திருந்த கத்தியால், மூதாட்டி பழனியம்மாளின் கழுத்தில் சரமாரியாக குத்தினான். பின்னர், ஆட்டை அறுப்பது  போல கழுத்தை அறுத்தான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர், அய்யோ கத்தியால் குத்துகிறானே? என சத்தம் போட்டுக்கொண்டு ஓடி வந்தார். உடனே அச்சிறுவன், மூதாட்டியின் சுருக்குப்பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு மொபட்டில் தப்பினான். சிறிது நேரத்தில் மூதாட்டி பழனியம்மாள் துடிதுடித்து இறந்தார். அவரது சுருக்கு பையில் ₹500 ரூபாய் இருந்ததாக உறவினர்கள்  தெரிவித்தனர். இதுகுறித்து இரும்பாலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர துணை கமிஷனர் தங்கதுரை மற்றும் போலீசார் விரைந்து சென்று, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அச்சிறுவன் தப்பி  சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. முதல்கட்ட விசாரணையில், அந்த சிறுவன் வேடுகத்தாம்பட்டியை சேர்ந்தவன் என்பதும், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான அச்சிறுவனுக்கு தாய் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அவனை போலீசார்  தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: