மதுரை: மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கின் விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்ட காவல் துறையினர் யாரும் நேற்று ஆஜராகவில்லை. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன் (24). போலீசார் விசாரணையின் போது மரணமடைந்தார். இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணைக்காக சம்பவத்தின் போது பணியில் இருந்த மற்றும் தொடர்புடைய மானாமதுரை டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் திலீபன், குமாரவேல்பாண்டியன் உள்ளிட்ட 11 போலீசார் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சம்மன் அடிப்படையில் நேற்று முதல் இவர்கள் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். ஆனால், நேற்று சம்மன் அனுப்பப்பட்ட யாரும் ஆஜராகவில்லை. வரும் நாட்களில் ஆஜராகக் கூடும் எனத் தெரிகிறது.
