பெண் போஸ்ட் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை: தவெக வழக்கறிஞர் அணி நிர்வாகி மீது வழக்கு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பெண் போஸ்ட் மாஸ்டருக்கு டார்ச்சர் கொடுத்ததாக கொடுத்த புகாரின்பேரில் தவெக மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர். திருப்பத்தூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் அருகே உள்ள தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் மொபட்டில் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சென்று வருகிறார். திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(35). இவர் திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார்.

இவர் பெண் போஸ்ட் மாஸ்டர் தினமும் பணிக்கு செல்லும்போதும், வரும்போதும் பைக்கில் பின்தொடர்ந்து சென்று தவறான முறையில் ‘சைகை’ காட்டியும், தனது பைக்கால் அவரது மொபட்டை மோதுவதுபோலும் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். அதேபோல் நேற்றுமுன்தினமும் தனது பைக்கில் சென்று டார்ச்சர் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போஸ்ட் மாஸ்டர், சத்தியமூர்த்தியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி பைக்கில் சென்று பெண் போஸ்ட் மாஸ்டரை மோதி கீழே தள்ள முயன்றுள்ளார். இதுகுறித்து பெண் போஸ்ட் மாஸ்டர், குரிசிலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சத்தியமூர்த்தி மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர். சத்தியமூர்த்தி மீது, பெண் ஒருவர் மாயமான வழக்கில் பணம் கேட்டு மிரட்டியதாக ஏற்கனவே இந்த காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: