சென்னை: தினக்கூலி ஊழியர்கள் பணிவரன்முறை செய்ததில் குளறுபடி செய்த நிர்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பொதுப்பணித்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் அதாவது மாதம் ₹7 ஆயிரம் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த தினக்கூலி ஊழியர்கள் தங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்கள் தொடர்பான பட்டியலை ஸ்கிரீனிங் கமிட்டி ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தது. அதன்படி, கடந்த மாதம் 3,407 தினக்கூலி ஊழியர்களை புதிய ஊதியம் வரன்முறை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதை தொடர்ந்து, அந்த பட்டியலில் இடம் பெற்ற பெரும்பாலான ஊழியர்கள் உடனடியாக அந்தந்த கோட்டங்களில் நியமன ஆணையை பெற்றுக்கொண்டு பணியில் சேர்ந்தனர்.
இந்த நிலையில் தினக்கூலி ஊழியர்கள் பணிவரன்முறை செய்ததில் குளறுபடி நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக, 1400 பேர் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் என்றும், மற்றவர்கள் 5 ஆண்டுகளுக்கு கீழ் பணிபுரிந்தவர்கள் என்பது தெரிய வந்தது. 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த ஆயிரக்கணக்கானோர் பணிவரன்முறை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் தினமும் 5 முதல் 10 பேர் வரை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்துக்கு வந்து மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி செயற்பொறியாளர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் செயற்பொறியாளர்கள் பலர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்து இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். மாறாக, பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம் (பொது) நிர்வாக அலுவலரை தொழில்நுட்ப இயக்ககம் நிர்வாக அலுவலராக பணியிட மாற்றம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு உள்ள நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மறைக்க முயற்சி செய்து இருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.