உத்திரமேரூர் அருகே அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மானாம்பதி, விசூர், கண்டிகை, ஆரோக்கியபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 934 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 30 ஆசிரியர்கள் உட்பட 38 பேர் பணியாற்றி வருகின்றனர். 10, 12 ம் வகுப்பு தேர்வில் இப்பள்ளி, கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இது மட்டுமின்றி தடகள போட்டிகளிலும் மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியானது கடந்த 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், ஏழை மாணவர்கள் பலர் பயின்று சாதனை படைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியின் வளர்ச்சிக்காக கடந்த ஆண்டு அரசு சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை துவங்கப்பட்டது. மாணவர்களின் கற்பிக்கும் திறன் மேலும் அதிகரித்தது. இதனால், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாமாக முன் வந்து, 8 முதல் 12ம் வகுப்பு வரை 10 வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம்க்கு தேவையான அனைத்து தடவாள பொருட்களையும் பல லட்சம் மதிப்பீட்டில் அமைத்து கொடுத்துள்ளனர். இது தவிர, வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசி, தமிழ் புலவர்களை போற்றும் வகையில் அவர்களின் பெயர்களையும் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சூட்டியுள்ளனர்.  இப்பணிகள் முடிவடைந்து ஸ்மார்ட் கிளாஸ் ரூம் துவக்க விழா நேற்று நடந்தது. மாணவர்கள் பாடம் எடுக்க ஆசிரியர்கள் மாணவர்களோடு அமர்ந்திருந்தது பெற்றோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: