வேலூர்: தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றவழக்குகளில் காவல்துறை பறிமுதல் செய்யும் வாகனங்களை ஏலம் எடுக்க இனி வரும் காலங்களில் அரசு துறைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, மதுவிலக்கு பிரிவு உட்பட காவல்துறை பிரிவுகளில், பல்வேறு குற்றங்கள் தொடர்பாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள் அனைத்தும், மாவட்ட எஸ்பிக்கள் உத்தரவின்பேரில், ஏலம் விடுவதற்கான தேதி அறிவிக்கப்படும். அன்றைய தினம் பொதுமக்கள் நுழைவு கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று, ஏலத்தில் பங்கேற்கலாம். அங்கு ஏற்கனவே, வாகனத்தின் விலை உரிய அதிகாரிகள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.