நாகூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய 463வது ஆண்டு கந்தூரி பெருவிழா!

நாகை:  புகழ்பெற்ற நாகூர் தர்க்காவின் 463வது ஆண்டு கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்த நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகை மாவட்டம் நாகூரில் புகழ்ப்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 463வது  ஆண்டு கந்தூரி திருவிழாவையொட்டி, மீராப்பள்ளிவாசல் மின்னொளியில் ஜொலித்தது. கந்தூரி விழாவின் கொடியேற்றத்திற்காக வருடந்தோறும் பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடி சிங்கப்பூரில் இருந்து, நாகைக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் முதுபக்கு எனும் இந்த சிறப்புக்கொடியை எடுத்து வரும் கப்பல் வடிவரதம், செட்டிபல்லக்கு, சாம்பிராணிசட்டி போன்ற ரதங்கள் ஊர்வலமாக நாகையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக நாகூர் வந்தடைந்தன. அப்போது தாரை தப்பட்டை, பேண்டு வாத்தியங்கள் முழங்க இஸ்லாமியர்கள் ஆடிப்பாடி கொடியை வரவேற்றனர். அதனை தொடர்ந்து கொடிக்கு தூ-வா ஓதப்பட்டு வாணவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது. அப்போது வண்ணமயமான வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. கந்தூரி விழாவின் குடியேற்றத்தை காண துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் தர்க்காவில் குவிந்தன. கந்தூரி விழாவின் முக்கிய நிகழிச்சியான  சந்தனக்கூடு விழா பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறுகிறது.

Related Stories: