லண்டன்: ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளதற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது என ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக, ஈரான் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும், மனித தவறுகளினால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.