பாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள்

பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை மூலம் பண்டைய தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு சிறப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம். தற்போதைய இளைய சமுதாயத்தினருக்கும், நகரங்களில் வாழும் மக்களுக்கும் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றுவதாகவும் பொங்கல் பண்டிகை விளங்குகிறது. `பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப, வீட்டிலுள்ள தேவையற்ற பழைய பொருட்களை நீக்க வேண்டும். அதற்கு பதிலாக புதிய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை நமது முன்னோர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு உதாரணமாக, குயவர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில், பழைய மட்பாண்டங்களை (பானைகள், குடிநீருக்காக பயன்படுத்தும் குவளைகள்) போகி பண்டிகையன்று உடைத்துவிட்டு, தைத்திங்கள் முதல் புதிய பானைகளில் சமைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

 இதன்மூலம் மட்பாண்டங்கள் செய்து பிழைப்பு நடத்துவோருக்கு வருவாய் கிடைக்கும். அத்துடன், புதிய பானைகளின் வரவால், மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படும். மண்பானைகளில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு தனி சுவையுண்டு என்பதை அவற்றை சாப்பிட்டு ருசித்தவர்கள் நன்கு அறிவார்கள். அதுபோல், பழைய விரும்பத்தகாத சம்பவங்கள் எல்லாம் தொலைந்து, தைத்திங்கள் முதல் அவை நல்லவையாக நிகழ வேண்டும் என முன்னோர் வலியுறுத்துவர். முந்தைய ஆண்டில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், வரும் ஆண்டில் நிகழாமல் பொங்கிவரும் பால் போலவும், சர்க்கரைப் பொங்கலின் இனிப்பை போலவும் சுவையாக இருக்க வேண்டும் என்பதே பொங்கல் பண்டிகையின் தத்துவம் என முன்னோர் கூறுவர்.  சமீபத்திய தகவல் தொழில்நுட்ப காலத்தைப் போலன்றி, தொலைத்தொடர்பு வசதிகள் அந்நாட்களில் இல்லை. பரம்பரையாக ஒரு சில குடும்பங்களுக்கே, பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்து வந்துள்ளனர்.

தவில், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதசுரம் இன்னிசை, வாய்ப்பாட்டு, வீணை உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தல், சிலேடையுடன் கூடிய பேச்சுக்கலை, நகைச்சுவை நிகழ்ச்சி என ஒவ்வொரு குடும்பத்துக்கும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் உரிய பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்காகவும் இப்பண்டிகைகள் இருந்துள்ளன. இதன்மூலம் இந்த கலைகள் அவர்களுடன் முடிந்துவிடாமல், அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  பொங்கல் பண்டிகையன்று வீட்டிலுள்ள பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை சொந்த ஊரில், ஒரே இடத்தில் கூடி அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொள்வதை இன்றும் பல இடங்களில் காணமுடிகிறது. இன்றைய நிலையில் கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை அருகிவிட்டது. இதனால் சிறு குடும்பங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இந்நிலையில், தற்போதைய சந்ததியினருக்கு பொங்கல் பண்டிகையின் மகத்துவம் எதுவும் தெரிவதில்லை. மேலும், தற்போது விவசாயத் தொழிலில் அறுவடை எந்திரங்கள், நெற்கதிரில் இருந்து நெல்லை பிரித்தெடுக்கும் எந்திரங்கள் என அனைத்தும் எந்திரமயமாகி விட்டன. உழவு செய்வதற்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டது போய், இன்று டிராக்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

 இன்று விவசாய நிலங்களும், காடுகழனிகளும் வீட்டு மனைகளாக, தொழிற்சாலைகளாக, அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருகின்றன. எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களையாவது கட்டாயம் பாதுகாக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழர்களின் பண்பாடு குறித்தும், பண்டிகைகளின் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும் என இந்த தைத்திருநாளில் உறுதிமொழி ஏற்போம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நம்மிடம் மிச்சமுள்ள விவசாய நிலங்களை விவசாயத்தைத் தவிர வேறு நோக்கங்களுக்காக விற்க கூடாது என உறுதியேற்க வேண்டும். அத்துடன் பசுமையான பொங்கல் நினைவுகளையும், நமது மூதாதையர்களையும் மனதில் எண்ணி பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடுவோம்.

ஆடையும் நம் அடையாளம்தான்

என்னதான் நவீன ஆடை வகைகள் வந்தாலும், நம் பண்பாட்டை மறக்கவே கூடாது. தமிழர் பண்டிகையான பொங்கல் தினத்திலாவது பண்டைய மரபு மாறாமல் பாரம்பரிய ஆடைகளை உடுத்துவது சிறப்பு. பெண்கள் சேலையும், ஆண்கள் வேட்டி சட்டையும் அணிந்தே பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.  சேலை அணிய தெரியாத இளம்பெண்கள் கூட எளிதாக சேலை அணியும் வகையில் ரெடிமேட் முறையில் சேலை வகைகள் வந்துவிட்டன. இதுபோல் ரெடிமேட் செட்டாக பாவடை தாவணியும்  விற்பனை செய்யப்படுகிறது. 5 வயது குழந்தைக்கு சேலை கட்ட விரும்பினால் கூட எளிதில் வாங்கி அணிவித்து விடும் அளவுக்கு சேலை வகையில் ரெடிமேட்  ரகங்கள் வந்துள்ளன. இது மட்டுமின்றி கண்ணைக்கவரும் வகையில் சமிக்கி வைத்த சேலைகள், கண்ணாடி பதித்த சேலைகள், எம்பிராய்டரி சேலைகள், சில்க் காட்டன் ரகம் என ஏகப்பட்ட ரகங்களில் சேலைகள்  விற்பனைக்கு குவிந்துள்ளன.

 வேட்டி அணிய தெரியாத கல்லூரி மாணவர்கள் கூட எந்த சிரமமும் இன்றி வேட்டி அணிந்து கொள்ளும் வகையில் ரெடிமேட் வேட்டிகள் விற்பனைக்கு வந்துவிட்டன. இவற்றை வாங்கி அப்படியே உடுத்திக்கொள்ள வேண்டியது தான். பொங்கல் பண்டிகை மற்றும் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய உடையான சேலை, வேட்டி, சட்டைகளை அணிந்து பாரம்பரியத்தை மறக்காமல் ஆடைகள் மூலம் நம் அடையாளத்தை அறிவிப்பது மிக சிறப்பாகும்.

Related Stories: