வரும் 6ம் தேதி சபரிமலையில் தரிசனம் செய்கிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 6ம் தேதி சபரிமலையில் தரிசனம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகர விளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று ஆங்கில புத்தாண்டு என்பதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் ேகாவிந்த் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக அவர் வரும் 5ம் தேதி விமானம் மூலம் கொச்சி வருகிறார்.

அன்று கொச்சியில் தங்கும் அவர் மறுநாள்(6ம் தேதி) சபரிமலை சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து கேரள அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி தரிசனத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு குடியரசு தலைவரை அழைத்து செல்வது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருகிறது. அவருக்காக பாண்டி தாவளத்தில் ஹெலிபேட் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாண்டி தாவளம் வந்து, பின்னர் அங்கிருந்து ஜீப் மூலம் சந்திதானத்தை அடையலாம். இதற்கு முன்பு கடந்த 1973ம் ஆண்டு அப்போதைய குடியரசு தலைவர் வி.வி.கிரி, சபரிமலையில் தரிசனம் செய்தார். இதன்பிறகு சபரிமலை வரும் 2வது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: