அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் செயல்பாடு தெரியுமா?

வாகனங்கள் என்பது, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக பயணிக்க வடிவமைக்கப்பட்டது. இந்த பயணத்தை மேலும் எளிமையாக்க உருவானதுதான் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம். அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலை பற்றி நாம் தெரிவதற்கு முன் க்ரூஸ் கண்ட்ரோல் என்றால் என்ன? என்பது பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில், நீண்ட தூரம் பயணிப்பவர்கள், பெரும்பாலும் குறிப்பிட்ட வேகத்தில் அதிக நேரம் பயணிக்க வேண்டிய நிலை இருக்கும். அவ்வாறான நேரங்களில் எல்லா நேரமும், காரை ஓட்டாமலேயே நீங்கள் பயணிக்கும் அதே வேகத்தில், நீங்கள் எதுவும் செய்யாமல் காரை தானாக பயணிக்க வைப்பதுதான் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம். அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் என்பது இந்த க்ரூஸ் கண்ட்ரோலின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட காரில், இதை ஆன் செய்தவுடன் வழக்கமான க்ரூஸ் கன்ட்ரோல் போல்தான் செயல்படும். ஆனால், நமக்கு எதிரே செல்லும் வாகனம் வேகத்தை குறைத்தால் அதை கணித்து அதற்கு தகுந்தாற்போல் நம் வாகனமும் வேகம் குறையும்.

வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் சென்சார் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் ஆன் ஆனவுடன் ரோட்டில் செல்லும் மற்ற வாகனங்களை கவனிக்க துவங்கும். அந்த வாகனத்தின் வேகம் குறைந்தால் அதற்கு தகுந்தாற்போல் நமது வாகனத்தின் வேகத்தையும் அது குறைக்கும். அந்த வாகனத்தின் வேகம் கூடினால், மீண்டும் நமது வாகனத்தின் வேகமும் கூடும். ஆனால் அதிகபட்சமாக க்ரூஸ் கண்டரோலை ஆன் செய்யும்போது, டிரைவர் செட் செய்யும் அதிகபட்ச வேகத்திற்கு மேல் செல்லாது. எதிரே உள்ள வாகனத்தை தொடர்ந்து குறைத்துக்கொண்டே சென்றாலும், நமது வாகனமும் அதே வேகத்தை கடைபிடிக்கும். வாகனம் மோதுவதற்கு உரிய சாத்தியக்கூறுகள் இருந்தால் உடனடியாக டிரைவரை அலார்ட் செய்து விடும். இந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் இரண்டு வகையாக இருக்கிறது. முழுமையாக செயல்படும் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படும் க்ரூஸ் கண்ட்ரோல் என இரு வகையாக உள்ளது. இதில், முழுமையாக செயல்படும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் எனப்படுவது வாகனம் எந்த வேகத்தில் சென்றாலும் செயல்படக்கூடியது. குறிப்பட்ட நேரத்தில் மட்டும் செயல்படும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் என்பது 30-40 கி.மீ. வேகத்தில் செல்லும் நேரங்களில் மட்டும் செயல்படும். மற்ற நேரங்களில் சாதாரண க்ரூஸ் கண்ட்ரோல் போல் செயல்படும்.

இந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பம், ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோனமஸ் க்ரூஸ் கண்ட்ரோல், இன்டலிஜென்ட் க்ரூஸ் கண்ட்ரோல், ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம், பெரும்பாலும் ரேடார் சென்சாரை வைத்தே செயல்படுகிறது. இது, காரின் முகப்பு பம்பர் பகுதியிலோ, கிரில் பகுதியிலோ பொருத்தப்பட்டிருக்கும். சில கார்களில் லேசர், ஆப்டிக்கல் பேஸ்டு ஸ்டிரியோஸ்கோபிக் கேமரா என பல கருவிகளை கொண்டு செயல்படுகிறது. இதில், சில கருவிகள், அதிகமான மழை அல்லது பனிப்பொழிவு காலங்களில் சரியாக செயல்படுவதில்லை. ரேடார்தான் பெரும்பாலான நேரங்களில் சரியாக செயல்படுகிறது. இந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் கருவி, க்ரூஸ் கண்டரோல் ஆப்பில் இருந்தாலும் வாகனம் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருந்தால், உடனடியாக டிரைவரை எச்சரிக்கும். க்ரூஸ் கண்டரோல் ஆன்-ல் இருந்தால் தானாக விபத்தை தவிர்க்கும் அளவிற்கு வேகத்தை குறைக்கும்.

பெரும்பாலான மெர்ஸிடிஸ் பென்ஸ் கார்களில் இந்த தொழில்நுட்பம் இருக்கிறது. டிரைவர் குறிப்பிட்ட அளவிற்கு வேகத்தில் செல்லும்போது, இதை ஆன் செய்து செட் செய்தால் இந்த வேகத்திலேயே கார் செல்லும். அதன்பின் அதில் இருக்கும் “+”, “-” பட்டன்களை பயன்படுத்தி காரின் வேகத்தை 10 கி.மீ. வேகம் வரை குறைக்கவோ, கூட்டவோ செய்யலாம். மேலும், எதிரே செல்லும் வாகனத்தில் இருந்து கடைபிடிக்க வேண்டிய தூரத்தையும் ‘’செட்’’ செய்துகொள்ளலாம். நீங்கள் புதிதாக ஆடாப்டிவ் க்ரூஸ் கண்டரோலை பயன்படுத்துகிறீர்கள் என்றால் கண்டிப்பாக எதிரே உள்ள காரில் இருந்து அதிகளவு தூரத்தை கடைபிடியுங்கள். குறைந்த அளவு தூரத்தை கடைபிடித்தால் சில நேரங்களில் உங்களுக்கு இந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் செயல்படுகிறதா? இல்லையா? என்ற பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை முதல்முறையாக செயல்படுத்தும்போது பிரேக்கில், ஒரு காலை வைத்துக்கொண்டு உஷாராக பயணிப்பது நல்லது.

Related Stories: