கடந்த ஜனவரி மாதம் டாடா ஹாரியர் எஸ்யூவி ரக கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஹாரியர் எஸ்யூவி ரக அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய 7 சீட்டர் மாடலை கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியது. பஸ்ஸார்டு என்ற பெயரில் இந்த மாடல் குறிப்பிடப்பட்டது. இப்புதிய 7 சீட்டர் எஸ்யூவி ரக கார், தொடர்ந்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மிக விரைவில் இப்புதிய 7 சீட்டர் எஸ்யூவி ரக காரை, டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எஸ்யூவி ரக காருக்கு கிராவிட்டாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், டீசர் வீடியோவில் வரும் 2020 பிப்ரவரி மாதம் இப்புதிய எஸ்யூவி ரக கார், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப்பிரிவு தலைவர் மாயங்க் பரீக் கூறுகையில், “சொகுசு, செயல்திறன் போன்ற அனைத்து விதத்திலும் டாடா கிராவிட்டாஸ் ஓர் உன்னத அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இந்திய வாகன சந்தையில், இந்த கார் மிக முக்கிய இடத்தை பிடிக்கும்” என்றார்.