நன்றி குங்குமம் முத்தாரம்
பூமியில் மிக அழகான இடங் களில் ஒன்று கானோ கிறிஸ்டல்ஸ் நதி. நூறு கிலோமீட்டர் நீளமுடையது. கொலம்பியாவில் பாயும் இந்த நதிக்குள் அழகழகான செடிகள் துளிர்க்கின்றன; பூக்கள் மலர்கின்றன. அதனால் இந்த நதியில் பாய்கின்ற நீர் மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு என பல வண்ணங்களில் காட்சியளிக்கிறது. கொலம்பியாவின் இயற்கை அதிசயம் என்று கொண்டாடப்படுகிறது இந்த நதி. கரடு முரடான பாறைகளுக்கு உள்ளேயும் நடுவிலும் பாய்கின்ற இந்த நதியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் தினமும் வருகை புரிகின்றனர்.
நதி பாய்கின்ற பாறைகள் எல்லாம் 1.2 பில்லியன் வருடங்களுக்கு முந்தையவை என்று தொல்லியலாளர்கள் சொல்கின்றனர். ‘‘மனிதராகப் பிறந்தவர்கள் இறப்பதற்கு முன் பார்க்க வேண்டிய 100 இடங்களில் இந்த நதியும் ஒன்று...’’ என்று சமீபத்தில் புகழாரம் சூட்டியிருக்கிறது பிபிசி. குறிப்பாக நவம்பர் மாதத்தில் இந்த நதியின் அழகைக் கண்டு ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது.