குருவாயூர் கோயில் உண்டியலில் துப்பாக்கி குண்டால் பரபரப்பு: பக்தர்கள் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: குருவாயூர் கோயில் உண்டியலில் துப்பாக்கி குண்டு கிடந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர். கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு உலகமுழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். ஏற்கனவே இந்த கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த போலீஸ்  பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலை சுற்றிலும் பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு அருகிலும் உண்டியல்கள் உள்ளன. கோயில் அருகில் உள்ள உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படும்.

இதன்படி நேற்று காலை கோயில் அருகே உள்ள உண்டியலை திறந்து பணத்தை எண்ணிக்கொண்டிருந்தனர். அப்போது அதில், 1.5 செ.மீ. நீளமுள்ள துப்பாக்கி குண்டு கிடந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் பரவியதும்  பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குருவாயூர் தேவசம் நிர்வாக அதிகாரி சிசிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குருவாயூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். துப்பாக்கி குண்டை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.  அது 9 எம்எம் கைதுப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டாகும். கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: