பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவி மீது கார்மோதி விபத்து. ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், துறை யூர் தாலுகா, உப்பிலியபுரத்தை சேர்ந்தவர் குமார் மகன் சரண்ராஜ் (21). சுகாதார ஆய்வாளர் பணிக்காக பயிற்சி பெற்று வருகிறார். இவர் நேற்று காலை உப்பிலியபுரத்திலிருந்து, கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு காரில் சென்றார். இதற்காக துறையூரிலிருந்து வந்தவர் செஞ்சேரி புறவழிச்சாலை வழியாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்வதற்காக தண்ணீர் பந்தலுக்கு சென்றுள்ளார். அப்போது, எம்ஜிஆர் நகரிலிருந்து 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்ததால், அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சரண்ராஜ் காரை சாலையின் வலது புறம் வேகமாக இறக்கினார். இதனால் நிலைதடுமாறிய இரு சக்கர வாகன ஓட்டிகள் காரின் பின்னால் மோத, கார், சாலையோரம் சிறுகனூர் அருகேயுள்ள பஸ்சில் ஏற காத்திருந்த, எளம்பலூர் காந்திநகரை சேர்ந்த கல்லூரி மாணவி மேனகா(23) என்பவர் மீது மோதியது. பின்னர் கார் சாலையோர பள்ளத்திற்குள் இறங்கி நின்றது.