புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. இதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தன. இதையடுத்து ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தனர்.