ஆயுதபூஜையை ஒட்டி தொடர் விடுமுறை ‘ஆம்னி’ பஸ்களில் கட்டணம் கடும் உயர்வு; போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு குழு

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையொட்டி ‘ஆம்னி’ பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக்கட்டுப்படுத்த போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும், 7ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தை நாட்கள் சனி, ஞாயிறாக உள்ளன. இதனால் இன்று இரவே பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்செல்வார்கள். பிறகு 8ம் தேதி திரும்புவார்கள். அவ்வாறு செல்வோரில் பெரும்பாலானோர் பாதுகாப்பு, சவுகர்யம் காரணமாக ரயில்களை தேர்வு செய்வார்கள். ஆனால் ரயிலில் இடம் கிடைக்காததால் பஸ் பயணத்தையே மக்கள் நாட வேண்டியிருக்கிறது.

இதற்காக தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இன்று முதல் 6ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் 1,695 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் மூன்று நாட்களுக்கு சென்னையிலிருந்து 6,145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் பிற ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கு, மற்ற முக்கிய இடங்களுக்கு செல்வதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் சிறப்பு பஸ்ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஏராளமானோர் முன்பதிவு செய்தும், நேரடியாகவும் பயணம் செய்வார்கள். மேலும் பலர் ஆம்னி பஸ்களில் செல்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தடுக்க போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கு திடீர் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும், ஆம்னி பஸ்களில் சனி, ஞாயிறு தினங்களில் கட்டணமாக, ரூ.600 - 1500 வரையிலும், சென்னை - கோவைக்கு ரூ.700 - 1,700 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது ஆயுத பூஜையை காரணம் காட்டி கட்டணமானது அதிகப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு தற்போது ரூ.1,700-ரூ.2,500, சென்னை-கோவைக்கு ரூ.1-700-2,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு முக்கிய ஊர்களுக்கும் கட்டணம் அதிகமாகவுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல் தீபாவளி பண்டிகைக்கும் குறைவான நாட்களே இருப்பதால் அப்போதும் கட்டண உயர்வு இருக்கும் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

Related Stories: