பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் மற்றும் ஒக்கலிக சமூதாயத்தினர் பேரணியில் ஈடுபட்டதால் பெங்களூரு ஸ்தம்பித்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதே வழக்கில் டி.கே.சிவக்குமாரின் மகளுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் பெங்களூரு தேசிய கல்லூரி மைதானத்தில் சிவக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து இன்று பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ஒக்கலிகா சமூதாயத்தினர் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ண பைரே கவுடா, சவும்யா ரெட்டி, தினேஷ் குண்டுராவ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சாலுவாரய ஸ்வாமி, நரேந்திர ஸ்வாமி, பாலகிருஷ்ணா, முன்னாள் எம்.பி. வி.எஸ் உக்ரப்பா உள்ளிட்டோர் இப்பேரணியில் உரையாற்றினர்.