ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல் முடிந்ததும் ப.சிதம்பரம் மீது அடுத்த அஸ்திரம் பாய்கிறது

* விமானம் கொள்முதல் வழக்கில் இன்று ஆஜராக சம்மன்

* அடுத்தடுத்த வழக்கில் சிக்குவதால் பெரும் பின்னடைவு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப.சிதம்பரம், சிபிஐ காவலில் உள்ளார். அதன் விசாரணை முடிந்த பின், விமான கொள்முதல் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளதால், ப.சிதம்பரம் தரப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 111 விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், 42 ஏர்பஸ் விமானங்களும், 24 போயிங் விமானங்களும் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், 111 விமானங்கள் தேவைக்கும் அதிகமாக வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு அதிகாரமிக்க அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த ப.சிதம்பரம் இருந்தபோதுதான் விமானங்கள் கொள்முதல் குறித்து அவர் முடிவு செய்துள்ளார். மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டார் என்று முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஆகஸ்ட் 23ம் தேதி (இன்று) ஆஜராக அமலாக்கப்பிரிவு கடந்த 19ம் தேதி, ப.சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், தற்போது சிபிஐ அவரை கைது செய்துள்ளதால், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை முடிவுக்கு பிறகு, இந்த வழக்கில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ப.சிதம்பரம் ஆஜராக வேண்டியிருக்கும்.

ப.சிதம்பரம், அவரின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் நிதி கார்த்தி ஆகியோர் மீது கறுப்பு பணம் மற்றும் வெளியிடப்படாத வெளிநாட்டு வருவாய் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வருமானவரித்துறை நோட்டீஸ் அளித்திருந்தது. இந்த நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் மாதம் ரத்து செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வருமானவரித்துறை மேல்முறையீடு செய்து அந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது. மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் சிதம்பரத்தின் உறவினர் ஒருவரும் சேர்ந்து தமிழகத்தில் தனியார் உணவகத்திற்காக நிலம் கையப்படுத்தியதில் முறைகேடு என்ற புகார் நிலுவையில் உள்ளது. ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது நடந்ததாக சொல்லப்படும் இந்த முறைகேடு குறித்து, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, இஷ்ரத் ஜகான் வழக்கில் பிரமாணப் பத்திரத்தை திருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தற்போது டெல்லி போலீசார் விசாரணையில் நிலுவையில் இருக்கிறது. இதனை, சிபிஐ கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு வழக்கில், அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறுவதற்காக சில சட்டவிரோத விஷயங்களில் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இவ்வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தனித்தனியாக ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு எதிராக விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சாரதா சிட்பண்ட் வழக்கில் ரூ.1.4 கோடி லஞ்சம் வாங்கினார் என்று ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது. ஆனால், நளினி சிதம்பரத்தை கைது செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தடை விதித்துள்ளது. சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ தொடர்ந்து நடத்திவருகிறது. ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான பெரும்பாலான வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருவதால், தற்போது சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்தை வெளியே விட, புலனாய்வு அமைப்புகள் கடும் எதிர்ப்பை நீதிமன்றத்தில் பதிவு செய்து வருகின்றன.

Related Stories: