வேலூர்: என்ஐஏ, முத்தலாக், காஷ்மீர் போன்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டங்களே எனது தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று வேலூரில் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார். வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மக்களவை தேர்தல் இவ்வளவு விரைவாக நடக்க நான் தான் காரணம். ஆனால் நூல் இழையில் எங்கள் வெற்றி பறிபோனது. இருந்தாலும் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக லட்ச கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் வேலூர் தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தத்தில் அதிமுக தான் வென்றுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை இது வெற்றிபெற்ற தொகுதியாகவே இருக்கிறது. ஆனால் மக்களவைக்கு என்னால் செல்ல முடியவில்லை.