சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் என்ற பேச்சுக்கே இடமில்லை என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சென்னையில் மிகுந்த பரபரப்பான சூழலில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுப்பெற்ற நிலையில் தலைமை அலுவலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்க அதிருப்தி எம்எல்ஏக்கான ரத்தினசபாபதி, கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும் இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.