சென்னை: சென்னையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தொழில், பணிகள் நிமித்தமாக தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வருவார்கள். சிலர் பார்சல் வாங்கி வருவார்கள். கடந்த சில ஆண்டுகளாக வீடு மற்றும் அலுவலகங்களில் உட்கார்ந்தபடியே செல்பேன் ஆப்பில் ஆர்டர் செய்து உணவு வரவழைத்து சாப்பிடுகின்றனர். ஆன்லைனில் ஆர்டர் எடுத்து உணவு சப்ளை செய்யும் வேலைக்கு அதிக சம்பளம் கிடைப்பதால் இந்த வேலைக்கு படித்த இளைஞர்கள் ஆர்வமுடன் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் உணவுப் பொருட்களை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதால், மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள்.