அரசு ஊழியர்கள், பணியாளர்கள் வேட்டி போன்ற தமிழ் கலாசாரம் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து அலுவலகம் வர வேண்டும்: அரசாணை வெளியீடு

சென்னை: தலைமைச் செயலக ஊழியர்களுக்கு என தனியாக தமிழக அரசு சில ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் நேர்த்தியான, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையில் ஆடைகள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசாணையின்படி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், சேலை, துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கம்மீஸ், சுடிதார் ஆகிய ஆடைகளை அணிந்து வரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கூடுமான வகையில், அடர்வண்ணங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது.

இதேபோல், தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள், ஃபார்மல் வகையிலான பேன்ட், சட்டைகளையே அணிதல் வேண்டும் என்றும், அலுவல் ரீதியாக நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர் தங்களின் ஆடை நிறம் மற்றும் ஆடையின் வடிவமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் வேட்டி போன்ற தமிழ்க் கலாசாரம் மற்றும் இந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்து அலுவலகம் வரலாம்; டி-சர்ட் போன்ற சாதாரண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: