மதுரை: அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து, மதுரையில் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகரில் ஏற்படும் மின்தடை குறித்து பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதனால், பொதுமக்களும் முன்னேற்பாடுடன் அன்றைய பணிகளை முடித்துக் கொள்கின்றனர். ஆனால், மாநகரில் சில பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மகாத்மா காந்தி நகர் துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக மீனாம்பாள்புரம், எஸ்.ஆலங்குளம் மற்றும் ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், இரவு 9 மணிக்கு ஏற்படும் மின்தடை அதிகாலை வரை நீடிக்கிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் மாணவ-மாணவியர், இரவு நேர மின்தடையால் பெரும் அவதிப்படுகின்றனர்.