பெங்களூரு: கர்நாடகாவில் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அளித்த விருந்தில் காங்கிரசின் 2ம் கட்ட தலைவர்கள் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியானதால் முதல்வர் குமாரசாமி கோபத்தின் உச்சத்துக்கு சென்றுள்ளார். கர்நாடகாவில் உள்ள மண்டியா மக்களவை தொகுதியில் மஜத-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில்கவுடா போட்டியிட்டுள்ளார். காங்கிரஸ் டிக்கெட் தர மறுத்ததால் முன்னாள் அமைச்சரும், நடிகருமான அம்பரீஷின் மனைவி சுமலதா சுயேச்சையாக இங்கு களமிறங்கினார். இவருக்கு பாஜ ஆதரவு அளித்தது. இந்நிலையில்,மஜத வேட்பாளர் குமாரசாமிக்கு பணியாற்ற விரும்பாத காங்கிரஸ் நிர்வாகிகள் பகிரங்கமாக சுமலதாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா ஆகியோரிடம் புகார் கூறினார்.