5ம் தேதி ரமலான் நோன்பு தொடக்கம் பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்க உத்தரவிட வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு

சென்னை:தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் 38 மக்களவை, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மே 5ம் தேதி ரமலான் நோன்பு தொடங்க உள்ளது. கடந்த 2001ம் ஆண்டு முதல் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசின் சார்பில் நோன்பு கஞ்சி தயாரிக்க இலவச அரிசி கிடைக்குமா என இஸ்லாமியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலால் பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கக்கூடிய இலவச அரிசி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க ஆண்டுதோறும் இலவசமாக வழங்கி வரும் அரிசியை கால தாமதமின்றி தமிழக அரசு பள்ளிவாசல்களுக்கு வழங்க அனுமதி அளிக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: