‘‘பிரதமர் மோடிக்கு இணையான தலைவர்கள் நாட்டில் இல்லை என்று பாஜ தலைவர்கள் கூறி வருகிறார்கள். மோடியை எதிர்க்கும் சக்தி எனக்கு உள்ளது’’ என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.இது குறித்து தும்கூருவில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஜனநாயகத்தில் நீதிக்கும், நேர்மைக்கும் மதிப்பில்லாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இடையில் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பொது விஷயத்தில் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் இணைந்து செயல்பட்ட வரலாறு உள்ளது. ஆனால், பாஜ.வின் வளர்ச்சி நாட்டில் தலைதூக்க ஆரம்பித்து பின் சமத்துவம் என்ற தத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக உயிரிழந்து வருகிறது. மாறாக. பழி வாங்கும் அரசியல் தலை தூக்கியுள்ளது. அதற்கு உதாரணமாக மக்களவை தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது சாட்சியாக உள்ளது.நாட்டில் பாஜ.வினருக்கு மட்டுமே சுதேசி கொள்கை உள்ளதாகவும், மற்றவர்கள் தேசத்தின் எதிரிகள்போல் காட்டி கொள்கிறார்கள். சில நாட்களாக பிரதமர் மோடிக்கு இணையான தலைவர் நாட்டில் யாரும் கிடையாது என்று பாஜ தலைவர்கள் பேசி வருகிறார்கள். பிரதமர் மோடி என்ன புலியா அல்லது சிங்கமா? அவர் முன் நிற்பதற்கு பயப்பட. நானும் நாட்டின் பிரதமராக இருந்துள்ளேன். 58 ஆண்டுகள் அரசியல் அனுபவம் எனக்குள்ளது.