மும்பை: இங்கிலாந்தில் நடைபெறும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. மும்பையில் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணியை அறிவித்துள்ளது. 12-வது 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ல் தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால், ஓராண்டு தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளனர். இதனிடையே, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அறிவித்தனர். இந்த கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.