இட்லியின் தாயகமாக தமிழ்நாடு இருக்கலாம். ஆனால், உலக இட்லி தினம் கொண்டாடப்படுவது குறித்து நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மார்ச் 30 ஆம் தேதி, உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, மார்ச் 30 ஆம் தேதி, இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘மல்லிப்பூ இட்லி உணவகத்தின் உரிமையாளர் இனியவன்தான், இதற்கான விதையைப் போட்டவர்.
இது குறித்து இனியவன் பேசுகையில், ‘சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவருக்கும் ஏற்ற ஒரு பொதுவான உணவு இட்லிதான். தந்தையர் தினம், அன்னையர் தினம் என எல்லாவற்றுக்கும் ஒரு தினம் இருக்க, இட்லி குறித்தும் ஒரு தினம் இருக்க வேண்டும் என எண்ணினேன். இட்லிக்கென்று ஒருநாள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன். அதன் நீட்சியே, மார்ச் 30, இட்லி தினமாக ஆனது என தினத்துக்கான காரணம் குறித்து விளக்குகிறார்.