பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார விழிப்புணர்வு தினம் இன்று!(12-02-2019)..

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 12-ம் நாள் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார விழிப்புணர்வு தினம் (Sexual and Reproductive Health Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது. பாலியல் மற்றும் இனப்பெருக்கப் பிரச்னைகள் பற்றிய கல்வியை மக்களுக்குப் புகட்டி பால்வினை நோய் பரவலைக் குறைப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

பால்வினைத் தொற்று நோய்கள் பெரியளவிலான பொது சுகாதாரப் பிரச்னைகளில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்த பிரச்னைகளைத் தடுப்பதற்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகள், பிரச்சாரங்கள் மேற்கொள்வதோடு, அந்த பிரச்னைகள் தீவிரமடையாதவாறு தடுத்து உயிர்களைக் காப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

பால்வினை சுகாதாரம் என்பது ஒரு நபரின் உடல், மனம் மற்றும் சமூகநல நிலை போன்றவற்றை உள்ளடக்கியது என்கிறது உலக சுகாதார நிறுவனம். பாலுறவை நேர் சிந்தனையோடும் கண்ணியத்தோடும் அணுக வேண்டும். இன்பம் அளிப்பதோடு பாதுகாப்பான அனுபவமாகவும் அந்த பாலுறவு இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதில் வற்புறுத்தலும், பாரபட்சமும், வன்முறையும் கண்டிப்பாக இருக்கக் கூடாது.

பால்வினை சுகாதாரம் என்பது பரந்துபட்ட ஒன்றாகும். அதற்குள் பல சவால்களும் பிரச்னைகளும் அடங்கியுள்ளன. பால்வினை சுகாதாரம் சம்பந்தமான மனித உரிமைகள், உடலுறவு இன்பம், பாலுணர்வு மற்றும் நிறைவு, பால்வினைத் தொற்று நோய்கள், இனப்பெருக்கப் பாதைத் தொற்று மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் போன்ற நோய்கள், வன்முறை, பெண்ணுறுப்பு சிதைத்தல், பாலியல் செயலிழப்பு, பாலியல் சுகாதாரத்தோடு தொடர்புடைய மனநலம் போன்ற அனைத்துமே கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகளாக இருக்கிறது.

பாலியல் மற்றும் இனவிருத்தி சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கவும், அந்தரங்க ஆலோசனை சேவைகளுக்காகவும் தேசிய மக்கள் தொகை நிலைத்தன்மை நிதியம் ஒரு தொலைபேசி இணைப்பைத் தொடங்கியுள்ளது. இனப்பெருக்க சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குழந்தைகள் நலம் பற்றிய அதிகாரப்பூர்வமான தொலைபேசி தகவலைப் பெற விரும்புபவர்கள் 1800-11-6555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தொலைபேசி உதவி தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கிடைக்கிறது.

பால்வினை சுகாதாரம், பால்வினை நோய்கள், கருத்தடை, கர்ப்பம், மலட்டுத்தன்மை, கருக்கலைப்பு, பின் மாதவிடாய் நிலை, பருவமடைதல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, ஆண்கள் மற்றும் பெண்களின் இனப்பெருக்க மண்டலம் செயல்படும் விதம் குறித்தும் உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு விளக்கமளிக்கின்றது.

இந்தியா போன்ற நாடுகளில் பால்வினை நோய்கள் என்பது ஒரு சமூக விலக்கான பிரச்னையாகவே தற்போதுவரை கருதப்பட்டு வருகிறது. மேற்சொன்ன தொலைபேசி இணைப்பு இது போன்ற தவறான கருத்துகளைப் போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நட்பு வட்டம், வலைத்தளம், வாய்வழி செய்தி பரிமாற்றத்தைக் காட்டிலும் சரியானதொரு இடத்திலிருந்து பெறும் ஆலோசனையாக இருப்பதால் பொதுமக்கள் இச்சேவையை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: