ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னாள் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சரும், மூத்த தொழிற்சங்கத் தலைவருமான ஜார்ஜ்  பெர்னாண்டஸ் மறைந்து விட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.நெருக்கடி நிலையை எதிர்த்து கடுமையாகப் போராடிய அவர், தமிழகத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற  திமுக ஆட்சியில் ஜனநாயகக் காற்றைச் சுவாசித்தவர் மட்டுமல்ல - இறுதிவரை உற்ற நண்பராக இருந்தவர்.

கார்கில் போரில் இந்திய வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் என்பதை யாரும் மறந்திட இயலாது. தன் வாழ்நாள் முழுவதும்  தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஓயாது பாடுபட்டவர். அவர் விட்டுச் சென்றுள்ள மகத்தான பணிகள் தொழிலாளர் வர்க்கம், அடித்தட்டு மக்கள்,  ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோர் மத்தியில் என்றைக்கும் நீங்காப் புகழுடன் நிலைத்திருக்கும். “மாபெரும் மக்கள் தலைவர்” ஒருவரை  இழந்து தவிக்கும் அவரது உறவினர்களுக்கும், தொழிலாளத் தோழர்களுக்கும், சோசலிஸ சிந்தாந்த ஆர்வலர்களுக்கும் எனது ஆறுதலையும்,  இரங்கலையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதோடு, திமுக சார்பில், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலுக்கு நேரில்  சென்று அஞ்சலி செலுத்துகிறார். இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: