கரூர்: ‘‘இறைவா 2019ல் குற்றச்சம்பவங்கள் நடக்காத ஆண்டாக இருக்க வேண்டும்’’ என்று வேண்டி கரூர் வெள்ளியணை காவல் நிலையத்தில் நேற்று மதியம் கிடா வெட்டி காவலர்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. கரூர்-திண்டுக்கல் செல்லும் சாலையில் மாவட்டத்தின் எல்லையில் வெள்ளியணை காவல் நிலையம் உள்ளது. காவல் நிலையத்தில், நேற்று காலை அனைத்து காவலர்களும் பரபரப்புடன் காணப்பட்டனர். மதியம் காவல் நிலையம் அருகே கிடா வெட்டி, மட்டன் குழம்பு, வறுவல் போன்ற அனைத்து விதமான சமையல்களும் நடந்தன. காவல் நிலையம் அருகிலேயே சமைக்கப்பட்ட அனைத்து வகையான உணவுகளும் சாமிகளுக்கு படையலாக வைக்கப்பட்டு, ‘‘இறைவா அடுத்து பிறக்கவுள்ள 2019ம் ஆண்டாவது குற்றச்சம்பவங்கள் எதுவும் நடக்காத ஆண்டாக இருக்க வேண்டும்’’ என பயபக்தியுடன் போலீசார் வேண்டி கொண்டனர்.