தாராபுரம் அருகே பொன்னூஞ்சல் திருவிழா : பெண்குழந்தைகளை தோளில் சுமந்த தாய்மாமன்கள்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது பண்டைய கொங்கு 26 நாடுகளின் தலைமை இடமான தற்போதைய சங்கரண்டாம்பாளையம்  பட்டக்காரர் அரண்மனையில் திருவாதிரையை முன்னிட்டு 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பொன்னூஞ்சல் திருவிழா நேற்று பாரம்பரிய முறைப்படி நடந்தது.  இவ்விழா குறித்து கொங்கு பெரிய குலத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் உட்பட பல்வேறு  மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொன்னூஞ்சல் விழாவில் கலந்துகொள்ள வருகை தந்தனர்.

முன்னதாக பெரியநாயகி அம்மன் உட்பட 7 கோயில்களில் சிறப்பு அபிசேகங்கள் நடத்தப்பட்டு குடும்பத்தில் முதலாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு  பட்டாடைகள்,அணிகலன்கள் அணிவித்து விநாயகர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.அங்கு 16 வகை சீர்வரிசைகளுடன் காத்திருக்கும் 12 வயதுக்கு உட்பட்ட  பெண் குழந்தைகளின் நெற்றியில் தாய்மாமன் தங்க பட்டம் கட்டி தனது தோள் மீது அமரவைத்து ஊர்வலமாக சுமந்து வந்து தங்கத் தகடுகளால் வேயப்பட்ட  ஊஞ்சலி அமர வைக்கப்பட்டனர்.

குழந்தைகளுக்கு உறவினர்கள் வெண்சாமரம் வீச பெரியநாயகி அம்மனாகவே பெண் குழந்தையை ஊஞ்சலில் ஆட வைத்தனர். கரிகால சோழனின் மகள்  ஆதிமந்தை என்பவரை  சேரநாட்டு மன்னன் அட்டன் ஆத்தி என்பவருக்கு மணம் முடிப்பதற்கு ஆதிமந்தையின் தாய்மாமன் இரும்பிடர் தலையர் பேரூதவி  செய்தார். அதற்கு நன்றியாக இரும்பிடர் தலையர் வம்சாவழியில் வந்த கொங்கு வேளாளர் பெரியகுல பெண்களுக்கு தான்  விளையாடிய  பொன்னூஞ்சலையும்  பரிசாக வழங்கி,அந்த பொன் ஊஞ்சலில் ஆடும்  உரிமையையும் வழங்கியதாகவும் வரலாறு. கொங்கு தமிழர்கள் பாரம்பரியம்,கலாச்சார மரபு மாறாமல் இன்று  வரை பொன்னூஞ்சல் விழா தாய் மாமனின் தலைசிறந்த உறவையும்,பெண்  குழந்தைகளின் தெய்வீக தன்மையையும் போற்றும் வகையில் நடத்தப்பட்டு  வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: