நாசரேத்: தூத்துக்குடியில் இருந்து நாசரேத் வழியாக உவரி செல்லும் அரசு பஸ் அடிக்கடி மாயமாவதால் ஆசிரியர்கள், பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். தூத்துக்குடியில் இருந்து தினமும் காலை 5.15 மணிக்கு தடம் எண் 145 எஸ்.எப்.எஸ். அரசு பஸ் புறப்பட்டு புதுக்கோட்டை செபத்தையாபுரம், சாயர்புரம், ஏரல், நாசரேத், சாத்தான்குளம், இட்டமொழி, திசையன்விளை வழியாக உவரிக்கு சென்று வருகிறது. இதே போல் உவரியில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு திசையன்விளை, நாசரேத், குரும்பூர் வழியாக தூத்துக்குடிக்கு செல்கிறது. இந்த பஸ் மதியம் 1.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு இதே மார்க்கமாக உவரிக்கு செல்கிறது. பின்னர் உவரியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திசையன்விளை, இட்டமொழி, சாத்தான்குளம், நாசரேத், குரும்பூர், ஏரல் வழியாக தூத்துக்குடி செல்கிறது.
