புதுடெல்லி: ‘சிபிஐ.யில் அலோக் வர்மா இயக்குனராகவும், ராகேஷ் அஸ்தானா சிறப்பு இயக்குனராகவும் தொடர்ந்து நீடிக்கின்றனர். நாகேஸ்வர ராவிடம் இடைக்கால பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது’ என சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. வழக்கில் இருந்து குற்றவாளியை தப்ப வைக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டின ர். இதில், அஸ்தானா மீது எப்ஐஆர் பதிவு செய்ய அலோக் வர்மா உத்தரவிட்டார். உயர் பதவியில் இருக்கும் இருவர் இடையே மோதல் ஏற்பட்டதால், இவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, இவர்களின் பொறுப்புகளை இணை இயக்குனராக பணியாற்றிய நாகேஸ்வர ராவிடம் வழங்கியது. மத்திய அரசின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.