தனுஷுடன் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர், நித்யா மேனன். கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ என்ற படத்தில் நடித்திருந்தார். பல்வேறு மொழிகளில் நடித்து வரும் அவர், ‘கியூரி புரொடக்ஷன்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என்னை பொறுத்தவரையில், கதைகளை சொல்வதை விட, அதை படமாக தயாரிப்பது மேல் என்று நம்புகிறேன். அறிவை விட ஆழமான இடத்தில் மக்களை சென்றடைய வேண்டும்.
நான் கிரியேட்டிவ் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது எனக்குள்ளும், அதை பார்ப்பவர்களுக்குள்ளும் ஒரு மிகப்பெரிய மாற்றம் உருவாகும். இது அமைதியாக நடக்கும். நடிக்க தொடங்கிய முதல் நாளில் இருந்தே திரைப்படம் தயாரிப்பது செயல்முறையாகவும், எனது நோக்கமாகவும் இருந்தது. எந்நிலையிலும் அந்த நோக்கத்தை தொடர்வேன்’ என்றார். நடிப்பு தவிர பின்னணி பாடுவதிலும் ஈடுபட்டுள்ள நித்யா மேனன், திரைப்படம் இயக்க ஆயத்தமாகி வருகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் தயாரிக்க நிறுவனம் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
