விஜய் தேவரகொண்டா படம் இயக்குனர் மீது தயாரிப்பாளர் புகார்

ஐதராபாத் : விஜய் தேவரகொண்டா படத்தை இயக்கும் டைரக்டர் பரசுராம் மீது தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் புகார் கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் கீதா கோவிந்தம் படம் திரைக்கு வந்தது. இந்த படத்தை பரசுராம் இயக்கியிருந்தார். கீதா கோவிந்த படத்தை அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் வாங்கி வெளியிட்டார்.

படம் பெரிய வெற்றி பெற்றது. அப்போது அல்லு அரவிந்த் தயாரிக்கும் படத்தை இயக்கித் தர பரசுராம் ஒப்பந்தமானார். இதற்காக பரசுராமுக்கு பெரும் தொகையை அட்வான்ஸாக அல்லு அரவிந்த் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி பரசுராம் படம் இயக்கித் தரவில்லையாம்.

இந்நிலையில் தில் ராஜு தயாரிக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்க பரசுராம் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் அறிவிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து தனது படத்தை இயக்காமல், தில் ராஜு படத்தை பரசுராம் இயக்க அனுமதிக்க கூடாது என அல்லு அரவிந்த் பிரச்னையை கிளப்பினார்.

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்னையில் தலையிட்டுள்ளது. அல்லு அரவிந்த், தில் ராஜு பேசி சுமூக முடிவு எடுக்க சங்கம் கோரியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக இரண்டு தயாரிப்பாளர்களிடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

Related Stories: