ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே I

உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் II

- என்பது விஸ்வாமித்ரமுனி வாக்கு.

ஆஹா, இனிய மெட்டு செம்மையான பொருள்- ஆழ்ந்த கருத்து. அழகிய ராகத்துடன், திருப்பதி திருவேங்கடவனைத் துயிலெழுப்பும் தெய்விகப் பாடல். ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்.

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தேன்குரலில் நம் செவிக்குள் பாய்ந்து, நமக்குள் இருக்கும் இறை சிந்தையையும் பக்தியையும் தட்டியெழுப்பிச் சிலிர்ப்பூட்டும் தெய்வப் பிரவாகம்- ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்.

இறைவனைத் துயிலெழுப்பவே சுப்ரபாதம். தமிழில் திருப்பள்ளியெழுச்சி என்பார்கள். இந்த இடத்தில் ஆதியந்தம் இல்லாத இறைவனுக்கு ஏது தூக்கம் என்றொரு கேள்வி எழலாம். அது துயில் அல்ல. யோக நித்திரை. ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இதன் முதல் வரி விஸ்வாமித்ர முனிவரின் திருவாக்கில் உதித்தது என்பதே அது.

ஸ்ரீராமபிரானின் பாலபருவம். அயோத்தி அரண்மனைக்கு விஜயம் செய்த விஸ்வாமித்திரர் தமது யாகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் அசுரர்களை அடக்கவும் அழிக்கவும் ஸ்ரீராமனைத் தம்முடன் அனுப்பிவைக்குமாறு தசரதனிடம் கேட்டுக்கொண்டார். தசரதரோ தயங்கினார். பின்னர் குலகுரு விசிஷ்டரின் அறிவுரைப்படி ஸ்ரீராமனை அனுப்பச் சம்மதித்தார். கூடவே லக்ஷ்மணனையும் அனுப்பிவைத்தார்.

விஸ்வாமித்திரர் அவர்களுக்கு பலா, அதிபலா மந்திரோபதேசம் செய்ததுடன் வழியில் அமைந்திருந்த பல புண்ணியத் தலங்களின் மகிமைகளையும் மகான்களின் சரிதைகளையும் விளக்கியவாறு அழைத்துச் சென்றார். இரவுவேளை வந்தது. காட்டில் ஓரிடத்தில் கட்டாந்தரையில் படுத்து உறங்கினர்.

பொழுது புலர்ந்தது. அரண்மனையில் பஞ்சணையில் படுத்து உறங்கவேண்டிய அரசிளங்குமரர்கள் தரையில் படுத்திருப்பது கண்டு நெகிழ்ந்த விஸ்வாமித்ர மகரிஷி மிக்க பரிவுடன் அவர்களைத் துயிலெழுப்பினார். ‘கௌசல்யா சுப்ரஜா ராமா’ என்று முதன் முதலில் திருமாலுக்குச் சுப்ரபாதம் அமைத்த பெருமையும் பாக்கியமும் அவருக்கு ஏற்பட்டது.

இந்த வரியைக்கொண்டே துவங்குகிறது. இப்போது நாம் படித்தும் கேட்டும் மகிழும் ஸ்ரீவேங்கடச சுப்ரபாதமும் மற்றும் பிற சுப்ரபாதங்களும். திருமலைவாசனின் சுப்ரபாதத்தில் முதல் பகுதி பெருமானைத் துயிலெழுப்புவதாகவும் அடுத்து அவன் பெருமையைத் தெரிவிக்கும் விதமாகவும் அடுத்து அவனைச் சரணடைந்து இறுதியாக அவனுக்குமங்களம் பாடுவதாகவும் அமைந்துள்ளது.

இப்பாடல்களில் வைணவ சித்தாந்தக் கருத்துகளும், பொதுவான நீதிகளும் அடங்கியுள்ளன என்பது பெரியோர்களின் கருத்து. ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் மொத்தம் 70 ஸ்லோகங்களுடன் நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி யோக நித்திரையில் இருக்கும் வேங்கடவனைத் துயில் எழச் செய்வது குறித்ததாகும். இதில் 29 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.

2ம் பகுதி ஸ்ரீவேங்கடவனைத் துதிசெய்தல் அதாவது போற்றி வணங்கும் பகுதி. இதில் 11 ஸ்லோகங்கள் உண்டு.

3ம் பகுதியான பிரபத்தியில் திருமகளின் பெருமை குறித்தும்ஸ்ரீவேங்கடவனின் திருவடிகளில் சரணாகதி அடைவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 16 ஸ்லோகங்கள் உண்டு.

4 வது பகுதியான மங்களம்-நிறைவுப்பகுதி மங்களகரமான அருளை வேண்டும் வகையில் துதிக்கப்படும். இந்தப் பகுதியில் 14 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.

அரங்கமா நகருளானுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களைப் பாடியவர் தொண்டரடிப் பொடியாழ்வார். பிற்காலத்தில் சோளிங்கர், ஒப்பிலா அப்பன் திருக் கோயில், திருவல்லிக்கேணி போன்ற சில திவ்யதேசங்களுக்கு அந்தந்த ஸ்தலத்தைச் சார்ந்த சில மஹநீயர்கள் சுப்ரபாதம் இயற்றி, அது அந்தந்த திவ்யதேசங்களில் அனுசரிக்கப்படுகிறது. மற்றபடி பல திருக்கோயில்களில் வேங்கடேச சுப்ரபாதமே பாடப்படுகிறது.

இதை இயற்றியவர் மணவாள மாமுனிகளின் எட்டுச் சீடர்களில் ஒருவரான பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் என்ற மகான். சுமார் 600 ஆண்டு களுக்கு முன் வாழ்ந்தவர், இந்த மகான். பின்னாளில் இவருடைய வம்சத்தில் பிறந்து, அதே பெயரோடு 93 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்த பிரதிவாதி பயங்கரம் உ.வே. அண்ணங்கராச்சார்யர் சுவாமிகளால், ஸ்ரீபி.வி. அனந்தசயனம் ஐயங்காருக்கு சுப்ரபாதம் முறைப்படி கற்றுத்தரப்பட்டது.

ஸ்ரீமணவாளமாமுனிகள், வைணவம் (திருமால் வழிபாடு) வளர்க்க நிறுவிய அஷ்டதிக் கஜங்களில் ஒருவர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர். இவர் பிள்ளை லோகாச்சார்யர் என்ற ஆசார்யபுருஷரின் வம்சமான முடும்பை நம்பி வம்சத்தவர். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் (முன்னவர்) காஞ்சியில் அவதரித்தவர். 1361ம் ஆண்டு பிலவ வருடம் ஆடிமாதம் புஷ்ய நட்சத்திரத் திருநாளே இவருடைய அவதார நன்னாள்.

மணவாள மாமுனிகளுடன் திருப்பதியில் கைங்கர்யம் செய்துவந்தவர். மாமுனிகளின் விருப்பப்படி, அவரது 73வது திருநட்சத்திரத்தை முன்னிட்டு திருவேங்கடவனுக்கு சுப்ரபாதத்தை இயற்றினார். மாமுனிகள், இந்தச் சுப்ரபாதத்தைத் தினமும் திருமலையில் வழிபாட்டில் ஓத வேண்டும் என்றும் மார்கழி மாதத்தில் மட்டும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும், ஆண்டாளின் திருப்பாவையும் ஓதப்பட வேண்டும் என்றும் நிர்ணயித்தார். அதன்படியே இன்றும் விடியற்காலையில் சுப்ரபாதம் ஓதப்படுகிறது.

தொகுப்பு : எம்.என். ஸ்ரீநிவாசன்

Related Stories: