வேண்டிய வாழ்க்கையை அருளும் வேங்கடவன்

திருத்தங்கல், விருதுநகர்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலாகும். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெருமாளின் தேவியர்களான ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோர், இடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டி எழுந்தது. தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிய முன்வந்தார். ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க ‘தங்காலமலை’ என்னும் இத்தலத்திற்கு வந்து “செங்கமல நாச்சியார்” என்ற பெயரில் கடும் தவம் புரிந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், இவளுக்கு காட்சி கொடுத்து இவளே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். திருமகள் தங்கியதால் இத்தலம் “திருத்தங்கல்’ என்ற பெயர் ஏற்பட்டது.

திருத்தங்கல் பெருமாள் கோயில் “தங்காலமலை’ மீது அமைந்துள்ளது. சுவேத தீவில் இருந்த ஆலமரத்திற்கு தந்த வரத்தின்படி பெருமாள் இங்கு மலையாக நிற்கும் ஆலமரத்தின் மேல் தங்கி இருப்பதால் ‘தங்காலமலை” என்றும் “தங்காலப்பன்” என்று மூலவருக்கும் திருநாமம்.மூலவரான “நின்ற நாராயணப்பெருமாள்’ மேல் நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சந்நதியில் அருளுகிறாள்.இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற திருநாமங்கள் உண்டு. இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். விரும்பும் வாழ்க்கைத்துணையை அடைய விரும்புபவர்கள் இத்தலத்து பெருமாளை வணங்கலாம்!மூலஸ்தானத்தில் நான்கு தாயார்கள் உள்ளனர். அன்னநாயகி(ஸ்ரீதேவி), அம்ருதநாயகி (பூமாதேவி), அனந்தநாயகி(நீளாதேவி), ஜாம்பவதி. இவர்களில் ஜாம்பவதியை இத்தலத்தில் தான் பெருமாள் திருமணம் செய்து கொண்டாராம்.

இத்தலத்தில், தாயார் நின்ற கோலத்தில் மிக உயரமாக காட்சி தருகிறார். ஆழ்வார்கள் இத்தல பெருமாளை திருத்தங்காலப்பன் என்ற பெயரில் தான் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.இத்தலம் குறித்து சிலப்பதிகாரத்தில் வாத்திகன் கதையில் செய்தி இருக்கிறது.1300 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், வைகானஸ ஆகமப்படி பூஜை நடக்கிறது. கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் உள்ளார்.முன்னிரு கரங்கள் வணங்கிய நிலையிலும், பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடனும் நின்ற கோலத்தில் உள்ளார். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தில் மட்டுமே. இதனால் இக்கோயில் நாகதோஷம் நீக்கும் தலமாக திகழ்கிறது.மூலவர்: நின்ற நாராயணன், உற்சவர்: திருத்தண்காலப்பன், தாயார்: செங்கமலத்தாயார். அன்னநாயகி (ஸ்ரீதேவி) அனந்தநாயகி (நீளாதேவி) அம்ருதநாயகி (பூமாதேவி).ஜூன் 21, வெள்ளி திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம்.

- ச.சுடலை ரத்தினம்

Related Stories: